உன்னிடம் சொல்லிவிட வேண்டும்



சிலுவைகளின்
மீதான அச்சங்கள் நடுநிசி
விழிப்புகளை தந்துவிடுகிறது.

நேற்றிரவு வெளியே மழை
இருளை கரைக்க முயன்றது.
மழையும் மழை சார்ந்த காற்றும்
எனது சிலுவைகளை பறக்க
செய்வதாகயிருந்தது.

தடையின்றி சுவாசிக்க முடிந்தது.
சிலுவைகள் பறந்தது ஆறுதலாகயிருந்த 
மறுநொடியே  இருளிலிருந்து  சிலுவைகள்
வெளியேறியது.

இந்த சிலுவைகளை முதலில் கண்டது
கலைமணி மாமாவின் இறப்பின் போதுதான்.
அரசு மருத்துவமனையின் வளாகத்தில் 
மூப்படைந்த மரத்தின் கீழ் நின்றிருந்தேன் அப்போது.
கதவை திறந்து வெளியேறிய அக்கா
'ஐயோ ..... ' வென
வீறிட்டபோது பெரும் பாறையாக இருள்
உருண்டோடி வந்து அமுக்கியது.
அந்நேரத்தில் தான் சிலுவைகள் என்னுடன்
அப்பியிருக்க வேண்டும்.

நிதானித்த போது
நின்றிருந்த மரத்தில் சிலுவைகள் 
காய்த்து தொங்கியது.

உருண்டோடிவிட்டிருந்த ஆண்டுகளில்
சிலுவைகளும் உடன் வந்தன.
தற்போது சிலுவைகளின் பளுவும் அதிகரிக்க
புதிதாக துருத்திகொண்டுயிருக்கும்
துருவேறிய ஆணிகள் வேறு.

சருகுகள்
நிரம்பிய இந்த சாலையை கடப்பதற்குள்
உன்னிடம் சொல்லிவிட வேண்டும்
சிலுவைகளை பற்றி.
உனது மிதமான பார்வை
சிலுவைகள் உடைந்து நொறுங்குவதற்கும் 
ஒரு தொடுகை
சிறகுகள் முளைப்பதற்கும்
போதுமானதாகயிருக்கும்

நன்றி : உயிரோசை 

10 comments:

  1. வாழ்வெனும் பெரும் பயணத்தில் நம் மீது சுமத்தப்படும் சிலுவைகளை உடைத்தெறியும் சக்தி அன்பிற்கு மட்டுமே உண்டென்பதை உணர்த்தும் நல்ல கவிதை !

    ReplyDelete
  2. துயரங்கள் பழகிடும் போது... சிலுவைகள் கணப்பதில்லை.... நாமே சிலுவைகள் ஆகிவிடுவதால்....

    நீண்ட நாளாகிவிட்டது.... தோழரே....

    ReplyDelete
  3. வாழ்வின் துயர் நிரம்பிய பக்கங்களை அயராது எழுதிக்கொண்டே இருக்கிறது உங்கள் கவிதைகள் வேல்கண்ணன்.

    சிலுவைகளும் சருகுகளும் துயரின் அடையாளங்களை அழுத்தமாய்க் வெளிக்காட்டுகின்றன.

    ஆனாலும் இந்தச் சாலையைக் கடக்க ஒரு மென் பார்வையும் ஒரு தொடுதலும் போதுமா வேல்கண்ணன்?

    ReplyDelete
  4. கண்ணின் கடைப் பார்வை
    காட்டியபின்
    கடுகாகிப் போன
    பாவேந்தரின் மாமலை
    உங்கள் சிலுவைகள்.
    சுமப்பது சுலபமாய்த் தோன்றலாம்
    சுமக்க வ்ண்டியது தோள்கள்தான்.
    பாரம் தாங்க வருமோ பா(ர்)வை?

    ReplyDelete
  5. அபாரம் நண்பரே, படத்தை ரசித்தேன் :)

    ReplyDelete
  6. இயற்கையும்,அன்பும் நம்மை புதுப்பித்து விடுகின்றனதான்.அதை சரியாகப் பதிவு செய்கிறது கவிதை. கவிதையின் இறுதிப் பகுதி மென்மை. நான்காவது பத்தியைக் கொஞ்சம் கூர்மைப்படுத்தியிருக்கலாம் என்றும் தோன்றியது.

    ReplyDelete
  7. எளிமையா எழுத ஆரம்பிச்சீட்டீங்களா? ரொம்ப அருமையா இருக்கு.

    ReplyDelete
  8. சிலுவை
    சருகு
    சிறகு
    மூன்று
    வெவ்வேறு
    உலகத்திற்குள்
    இழுத்துச் செல்கிறது
    கண்ணன்.

    ReplyDelete
  9. நன்றி தமிழ்
    நீங்களும் உணர்த்தியமைக்கு

    நன்றி தோழர் சி. கருணாகரசு
    ஆம் எவ்வளவு நாளாயிற்று
    உங்களின் புரிதல் வேறு தளத்திற்கு எடுத்து செல்கிறது என்னை

    நன்றி சுந்தர் ஜி
    //அயராது எழுதிக்கொண்டே இருக்கிறது //
    எழுதியும் தீரவில்லை ஜி
    //ஒரு மென் பார்வையும் ஒரு தொடுதலும் போதுமா//
    போதவில்லை தான்

    நன்றி சிவகுமாரன்
    கவிதையான பின்னூட்டத்திற்கு...

    நன்றி நண்பர் கனவுகளின் காதலன்
    உயிரோசையில் படம் பார்த்தவுடன் உங்களை தான் நினைத்தேன்

    நன்றி சைக்கிள்
    //நான்காவது பத்தியைக் கொஞ்சம் கூர்மைப்படுத்தியிருக்கலாம் என்றும் தோன்றியது//
    அப்படியா ... கவனிக்கிறேன்

    நன்றி உழவன்
    நம்மில் எதுவும் இல்லைதானே ..

    நன்றி சந்தானகிருஷ்ணன்

    ReplyDelete