காவேரி அக்கா




யாரும் பார்க்கவில்லையென
எல்லோரும் பார்க்க
பக்கத்து வீட்டு
ஆறுமுகம் சாருடன்
கைகோர்த்து சுற்றிய
காவேரி அக்காவை
பார்த்து மகிழ்ந்தேன்.

அழுது அடம்பிடித்து
அடிவாங்கி விஷம்குடித்து
பிழைக்கவைத்து பயமுறுத்தி
பிடிக்காத மாமாவிற்கே
கட்டிவைத்த காவேரி அக்காவை
பார்த்து கலங்கினேன்.

தாலி ஏறிய நாளில்
கேலியும் கிண்டலும்
சிரித்தபடி இருந்த
காவேரி அக்காவை
பார்த்து வியந்தேன்.

பின் 'மாசமாகி' வந்து
பிள்ளையும் பெற்ற
காவேரி அக்காவை
பார்த்து யோசித்தேன்.

குழந்தைக்கு
பால்மறக்கடித்த சிலநாட்களில்
அதே ஆறுமுகத்துடன்
ஓடிப்போன
அதே காவேரி அக்காவை
பார்த்து
என்ன செய்ய ....?

மாசி 06, 2010 வார்ப்பு இணைய இதழில் வெளியான கவிதை.
நன்றி :  வார்ப்பு 
 
நன்றி : காவேரி அக்கா குடும்பத்தினருக்கு,

12 comments:

மண்குதிரை said...

சமீபத்தில் வாசித்த திருச்செந்தாழையோட மழைப்பொழுதில் கதையும் இதுதான்

நீங்கள் எளிதாக கவிதைக்குள் பிடித்துவிட்டீர்கள் நண்பா

சிறப்பா இருக்கு

Thenammai Lakshmanan said...

தாய்மை என்பது நிலைமைதான் தகுதி அல்ல என்பார் பாலகுமாரன் ஒரு கதையில் வேல்கண்ணன் அது உண்மைதான் போல இருக்கு

மாதவராஜ் said...

வாழ்வின் வர்ணங்களையும், புதிர்களையும் கொண்டாடும் கவிதை. அருமை நண்பா!!

கனவுகளின் காதலன் said...

நண்பரே,

ஒரு பெண்ணின், வாழ்வின் ஒரு சிறு பகுதியை அதன் வியப்புடனேயே உங்கள் வரிகளில் தந்திருக்கிறீர்கள்.

காதல் என்பது சில வேளைகளில் எல்லாவற்றையும் துறக்க செய்து விடும் சக்தி உடையதாக இருக்க கூடியதோ என்னவோ.

சிறப்பான வரிகள்.

உயிரோடை said...

ஒரு நாவ‌லுக்கோ ந‌ல்ல‌ சிறுக‌தைக்கோ ஆனா க‌ரு கொண்ட‌ க‌விதை

இதை ஆறு மாச‌த்துக்கு முன்ன‌மே செய்து இருக்க‌ கூடாதா அந்த‌ காவேரி அக்கா, இப்போ பிள்ளை, புருச‌ன் என்று இர‌ண்டு பேர் வாழ்க்கையை கேள்வியோடு விட்டுவிட்டாங்க‌ளே?

அன்புடன் நான் said...

தவறு...காவேரி அக்காவின் மீது அல்ல.

1. வற்புறுத்தியவர் மீது.
2.காவேரியின் வயது மீது.

கவிதையை ரசித்தேன்.

rvelkannan said...

மிக்க நன்றி மண்குதிரை. சிறந்த படைப்பாளியின் படைப்போடு ஒப்பிட்டமைக்கு

கவிஞர் மகுடேசுவரனின் கவிதையில் கூட இதை(சற்று வேறு மாதிரியாக) சொல்லியிருப்பார்.
('காமக்கடும்புனல்' கவிதை தொகுதி). நான் வசித்த தெருவில் 1988-90 ஆண்டுகளில் நடந்த உண்மை சம்பவம் தான் இது.
பெயரும் மாற்றவில்லை. 96- ல் இதை எழுதி முடித்தேன். காவேரி அக்காவின் கணவரிடம் சம்மதம் வாங்கிய பிறகே
வார்ப்பு குழுமத்திற்கு அனுப்பி வைத்தேன்.

வாங்க தேனு, கருத்துக்கு மிக்க நன்றி.

மிக்க நன்றியும் அன்பும் மாதவராஜ் அவர்களுக்கு,
உங்களின் வாழ்த்துகள் பெரிதான ஊக்கத்தை தருகின்றன.

நண்பர் கனவுகளின் காதலனுக்கு நன்றியும் அன்பும்.
நீங்கள் குறிப்பட்ட ''எல்லாவற்றையும் '' என்பது எனக்கும் வியப்பு தான் நண்பரே

வாங்க உயிரோடை , மிக்க நன்றி
உங்களின் அக்கறைக்கும் அன்பிற்கும் மிக்க நன்றி
இருவரும் மிகுந்த உடல் மற்றும் மன நலத்துடன் வாழ்கிறார்கள்.
நம் போன்றவர்களின் அன்பு அதை தொடர்ந்து செய்யும்.

மிக்க நன்றி தோழர் சி. கருணாகரசுக்கு
ரசனைக்கு மிக்க நன்றி

சத்ரியன் said...

வரலாறு கவிதையாகி ....!

இறுதி வரிக்கு “ காலம்” பதில் எழுதும் வேல்கண்ணன்.

ஹேமா said...

மனசுக்குக் கஸ்டமாயிருக்கு.ஏதோ அசிங்கமாவும் இருக்கு எனக்கு.

இல்ல அன்பு இப்பிடித்தானா?ஒருவேளை சரியா காவேரி அக்கா செய்தது !

rvelkannan said...

சத்திரியா, வணக்கம்
கருத்திற்கும் தொடர்வாசித்தலுக்கும் மிக்க நன்றி

வாங்க ஹேமா மிக்க நன்றி
அவ்வண்ணம் எழும்பிய கேள்வியே எனக்கும்

கல்யாணி சுரேஷ் said...

பெத்தவங்களையும் மத்தவங்களையும் பழிவாங்கின காவேரி அக்கா அந்த குழந்தையையும் சேர்த்து பழி வாங்கியிருக்க வேண்டாம்.

rvelkannan said...

கல்யாணி வருகைக்கும் கருத்திற்கும் நன்றி