ஆத்மா நாம் நினைவாக ..







நலம் விரும்பிகளே!


நானிருப்பது கரையான்புற்று
பாம்பு வரும் முன் 
வேறிடம் சென்றடைவேன்
பறவைகளின் கூடு
ஆமைகள் அடைகாக்கும் குழிகள்
தவறினால் விழி திறந்த நிலம்

ஊதாரிகளுக்கு 
உங்களின் கதவுகளிலும் சன்னல்களிலும்
தெரியும் வானம் கொள்ளாது
முடிவிலிகளைத் தேடிக்களைத்த
கால்கள் இளைப்பாறுகின்றன அலைகளில்
வெடிப்பில் கசியும் இரத்தத்தில்
பசியாறுகின்றன மீன் குஞ்சுகள்
வெளுத்து பிளந்த உதடுகள்
ஈரக்காற்றில் சுவாசிக்கின்றன

சுமந்த புத்தகங்கள்
இறக்கைகள் அல்ல என்பதை நான் அறிவேன்
சிலுவைகள் அல்ல என்பதை நீங்கள் அறிக
படைப்பு அனுபவம்
பார்வை உலகம்
எனக்கும்.

அவ்வப்போது
காறியுமிழ்ந்த எச்சிலை துடைத்துவிடுகிறேன்
மேல்விழுந்த கற்களை புதைத்துவிடுகிறேன்
வீச்சமும் வடுக்களும் இருக்கத்தான் செய்கின்றன

தளர்த்திய கச்சையின்
இடைத்துணியின் பின்னிருக்கும்
இளஉறுப்புகளினால் பெரிதான சலனமில்லை
தன்னை சூடேற்றி கொள்வதை தவிர
நேர்ப்பார்வையை தவிர்ப்பது நானல்ல.

நீளஅகலங்களை குறித்து
குழி வெட்டுதலுக்கோ
சிதையூட்டுவதற்கோ
சொல்லியனுப்ப வேண்டியதில்லை
சில நொடிகளில்
மரணிக்க நேரிடும் என்னை
இந்த நதியே இழுத்து செல்லும்
கரையொதுக்காமல் 

(ஆத்மாநாமிற்க்கு.... )

நன்றி : வார்ப்பு    

*************************





சென்றுன் எதிரியைத் தேடு
நீ வளர்த்த
பூனையின் மயிர்க்கால்களிலும்
தண்ணீர்பாம்பின் உடலிலும்
ஒட்டியிருக்கக் கூடும்.
வெவ்வேறு வெளிச்சத்தின் சாயலுக்கேற்ப
முகங்கள் மாறக்கூடும்
கூடுவிட்டுக் கூடுபாயவும் கூடும்.

நிதானித்த வேளை; தோல்சாய்ந்த வேளை
வெப்ப தகிப்பின்
பின்னிரவில் கண்விழித்த பொழுது
நண்பகல் மரணச்செய்தியின்
வெற்றுச் சுட்டில்.
இவ்வுலகின் இருண்ட
பகுதியுனுள்ளும்
சென்றுன் எதிரியைத் தேடு *
உன் நிழலிலும் கூட.

(*நன்றி :  ஆத்மாநாமின் கவிதை வரி ) 

இது ஒரு மீள்பதிவு
நன்றி : உயிரோசை 

*********************

ஆத்மா நாம் :::  எனக்குள் தணியாத தழல் ஏற்படுத்தியவர். எனது பார்வையை  பெரிதும் மாற்றியதில் பெரும் பங்கு இவரின் படைப்புகளுக்கு உண்டு. இயற்பெயர் :  துசூதன். பிறப்பு : 1951, 18 , ஜனவரி.  மிக முக்கியமான - சிறந்த - அரிதான இலக்கியவாதி.
'ழ' வின் ஆசிரியர். கவிதை எழுதுபவர்களும் எழுத நினைப்பவர்களும் ஆத்மா நாமை தவறாமல் படிக்க வேண்டும் என்பது என் விருப்பம்.
மேலும் அறிய 'ஆத்மா நாம் படைப்புகள்' (வெளியீடு : காலச்சுவடு).
இம்முன்னுரையில் குறிப்பட்டது போல் இவரின் கவிதையின் இதயம் ஒரு "நிச்சலன மெளனம்" தான். 
மிக நேர்த்தியாய் உடை அணியும் பழக்கம் உடையவர் என்று சொல்ல கேட்டு இருக்கிறேன். லுங்கி மற்றும் உள்ளாடைகளுடன்
இவரை பார்த்தவர்கள் மிக மிக குறைவு. அப்படியான படைப்பாளி  06.07.1984 அன்று  பேன்ட் சர்ட்டை கழற்றி படிகளில் வைத்து விட்டு கிணற்றுக்குள் குதித்து தற்கொலைக்கு  தள்ளிய இறுதி நாட்களின் மனச்சிதைவை  நினைத்தால் மனம் பதறுகிறது. 
இதன் பதிப்பாசிரியர் திரு. பிரம்மராஜன்   அவர்களுக்கும் அவருக்கு உறுதுணையாக நின்ற அனைவருக்கும் நன்றி 
இனி அவரின் கவிதையில் இரண்டு  :

மறுபரிசீலனை

நான் எதனையுமே மறுபரிசீலனைக்கே விட்டுவிடுகிறேன்
நான் படித்த புத்தகங்கள் என்னைக் கேலி செய்கின்றன.
நீ பழைய மனிதன் தான் என்கிறது ஒரு புத்தகம்
புதிய மனிதன்தான் என்கிறது இன்னொரு புத்தகம்
நான் மனிதன்தானா  என்று சோதித்துக்கொள்ளும்
நிர்ப்பந்தங்கள்
தொண்டையில் சிக்கிக்கொண்ட மீனின் முள்ளென
பச்சைப் புல்வெளியிடை சிக்கிக்கொண்ட கரும்பாம்பு
வெறுமனே சும்மா இருக்க முடியாத பேனா
சிதறிப்பறக்கும் பிணத்தின்னிக் கழுகுகள்
எங்கோ கேட்கும் கூக்குரல்
துணிக்கயிற்றில் தொங்கும் குரல்வளைகள்
தூங்குபவர்களையும் தூங்குவது போல் நடிப்பவர்களையும்
எழுப்பும் வார்த்தைக் கூட்டங்கள்
புறப்பட்டாகிவிட்டது கருப்புப் படை.

 திருஷ்டி

பானைத்தலை சாய்த்து
புல் பிதுங்கும் கைகளோடு
சட்டைப் பொத்தான் வெடிக்க
தொப்பையில் புல் தெரிய தனியாய்
யாருன்னைத் தூக்கில் போட்டார்
சணற்  கயிற்றால் கட்டிப் போட்டு
உன் காற்சட்டை தருவேன்
சென்றுன் எதிரியைத் தேடு
                           
                                                ஆத்மா நாம்

9 comments:

மொக்கை மாமா said...

நல்லதொரு பதிவு

சத்ரியன் said...

வேல் கண்ணன்,

நல்லதொரு பகிர்வு.

கனவுகளின் காதலன் said...

மிக அருமை, குறிப்பாக நலம் விரும்பிகளேயில் பசியாறும் மீன்கள் குறித்த வரிகள். ஆத்மாநாம் குறித்த அறிமுகத்திற்கும், அவரின் கவிதைகளிற்கும் நன்றி நண்பரே.

sweetsatheesh said...

சுமந்த புத்தகங்கள்
இறக்கைகள் அல்ல என்பதை நான் அறிவேன்
சிலுவைகள் அல்ல என்பதை நீங்கள் அறிக
படைப்பு அனுபவம் பார்வை உலகம் ;
எனக்கும்.

ஆத்மாநாம பற்றி மேலும் தெரிந்து கொள்ள விழைகிறேன் நண்பரே.

பா.ராஜாராம் said...

அற்புதமான பகிர்வு வேல்கண்ணா!!

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

rvelkannan said...

மொக்கை மாமா வரவிருக்கும் கருத்துக்கும் நன்றி

நண்பர் சத்ரியனக்கு நன்றியும் அன்பும்

தொடர் வாசிப்பையும் உற்சாகமும் கொடுத்து வரும்
நண்பர் கனவுகளின் காதலனுக்கு நன்றியும் அன்பும்
அவசியம் ஆத்மா நாமை படியுங்கள்

நண்பர் சதிஷ்க்கு நன்றி
//ஆத்மாநாம பற்றி மேலும் தெரிந்து கொள்ள விழைகிறேன் நண்பரே //
கவனிக்க
//மேலும் அறிய 'ஆத்மா நாம் படைப்புகள்' (வெளியீடு : காலச்சுவடு) //

அண்ணன் பா.ராவிற்கு நன்றியும் அன்பும்

ajayan bala baskaran said...

ஆத்மாநாமுக்கான இந்த அஞ்சலி என்னுள் பெரு விளைவை உண்டாக்கிற்று நண்ப .....நன்றி

rvelkannan said...

வாங்க அஜயன் வாங்க
மிகுந்த உற்சாகத்தையும் ஊக்கத்தையும் தருகிறது அஜயன் உங்களின் வார்த்தைகள்.
மிகுந்த நன்றி நன்றி நன்றி