நிதர்சன ஒளி

 
 
உன் வாசல் நெளிக்
கோலங்களிலிருந்து வண்ணங்களாக
பட்டாம்பூச்சிகள்  பறக்கின்றன
அவற்றிலிருந்து மீறியெழும் வாசனையொன்று
மகரந்தங்களை மலரவைக்கிறது 

உன் கைகளில் உருளும் 
தாயக்கட்டைகளிலிருந்து  தொடர்ச்சியாக
தாயங்கள் விழுகின்றன
தாயங்களிலிருந்து  மீறியெழும் புள்ளியொன்று
ஒளிச்சுழலை உறையவைக்கிறது 

உன் கேசத்திலிருந்து உதிரும்
இழையொன்று இரவுகளாகக்
கவிழ்கின்றன
இரவுகளிலிருந்து மீறியெழும் கனவொன்று
நினைவுகளை நிலைக்க 
வைக்கிறது 


உன் தூரிகையிலிருந்து வடியும்  
ரகசியமொன்று கதைகளாக
உலவுகின்றன
கதைகளிலிருந்து மீறியெழும் 
சொல்லொன்று 
புதிரொன்றை விடுவிக்க  வைக்கிறது
 
நன்றி : கல்கி  
(22. 1. 2012 கல்கி இதழில் வெளியானது)
நன்றி : ஓவியர் A.Selvam
 

9 comments:

ராமலக்ஷ்மி said...

கல்கியிலேயே வாசித்து விட்டிருந்தேன். அருமையான கவிதை. வாழ்த்துகள்!

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

மொழியில் சிக்குண்டு கிடக்கும் சொற்கள் கவிதையொன்று தருகின்றன. அக்கவிதையிலிருந்து உருகும் வண்ணமொன்று ஓவியத்தை வடிக்க முயல்கிறது.

அழகான கவிதை.இடைவெளியை நிரப்பினேனா வேல்கண்ணன்?

ந.பெரியசாமி said...

நல்லா வந்திருக்கு நண்பா

நிலாமகள் said...

காத‌லின் ர‌ச‌வாத‌ம்! க‌விதை முழுதும் வியாபித்திருக்க‌, க‌ல்கியில் பிர‌சுர‌ம்...!பாராட்டுகிறேன்.

santhanakrishnan said...

தேன் தொட்டு எழுதினீர்களா
கண்ணன்.
செம இனிப்பு.

உயிரோடை said...

வாழ்த்துகள்

Unknown said...

// கேசத்திலிருந்து உதிரும்
இழையொன்று இரவுகளாக //

என்னும் வரிகளில் 'இழை ஒன்று, இரவுகள் பலவாக' என்பதாக அர்த்தம் தந்தது முரணாய்ப்படுகிறது தோழர்,
மற்றபடி கவிதை அழகு!
அன்புடன்..

rvelkannan said...

நன்றி ராமலக்ஷ்மி
நன்றி சுந்தர் ஜி
நன்றி நண்ப நா.பெரியசாமி
நன்றி நிலாமகள்
நன்றி சந்தானகிருஷ்ணன்
நன்றி உயிரோடை
நன்றி பா.தியாகு
(ஒன்றிலிருந்து தானே பல - இது எப்படி முரண் ஆகும் நண்பா?)

Joelson said...

மிகவும் அருமை வார்த்தைகள் ஒவ்வொன்றும்