கதிர் பாரதியின் 'ஆனந்தியின் பொருட்டு தாழப்பறக்கும் தட்டான்கள்' படித்த பின்



முந்தைய வருடங்களில்
இவள் வந்து நின்ற போது கொஞ்சம் ஆடை இருந்தது.
அவளின் நாக்கு சற்றே நீண்டிருந்தது.
அது நம் பொட்டல் நிலத்தினை ஈரமடைய வைத்தது
இன்று
உடல் முழுவதும் புழுதியுடன்
ஏறக்குறைய நிர்வாணத்துடன் அவள் நிற்கிறாள்
நடமாடும் கான்கிரீட் செங்கோலாகி
அறுவடையற்ற மெட்ரோபாலிட்டன் நிலத்தில்
உழலும் நாம்
அவள்மேல் அப்பியிருக்கும் புழுதியையும்
சேற்றையும்
வியப்புடன் பார்க்கிறோம்.
அவள் நம்மை பார்த்து சிரிக்கவில்லை அழவும்
இல்லை.
அவளின் பார்வை மொழி நம்மை வசீகரிக்கிறது
அவளின் முன்னெப்போதும் இல்லாத செழுமை நடை
சூழல் மறந்து வயது மறந்து அனுபவம் மறந்து
நம்மை பின்னிழுத்து செல்கிறது.
பின்செல்லும் நம்மை சட்டென்று அவள்
துளியூண்டு எறும்பாக்குகிறள்
இம்மாம் பெரிய யானையாக்குகிறாள்
நேரத்திற்குள் கூண்டு அடையும் குரங்காக்கி
'சமர்த்து' என்று நன்னடத்தை சான்றிதழும்
தருகிறாள்
மறுகணமே கேரட்டை உற்பத்தி செய்யும்
எஜமானனாக உயர்த்துகிறாள்
எட்டாகனியாய் அதனை ருசிக்க காத்திருக்கும்
குதிரையாக மாற்றுகிறாள்
ம்ம்.. சில நேரங்களில் கேரட்டாகவும் மாற்றி
விடுகிறாள்.
தான் ஆஸ்பெஸ்டாஸ் அம்பாள்'ஆனா கதை சொல்லி
சம்பந்தன்களுக்கு முலையூட்டுவதையும்
சிட்டுக் குருவி தண்டவாளத்தில் விழுந்ததையும்
ரயிலின் பெயர் மாறி விட்டதையும்
அறியாத நம்மை ஏளனமாய் பார்க்கிறாள்
அவளுக்கு ஆனந்தி என்றும்
அவளுக்கு தாய் என்றும்
அவளுக்கு நிலம் என்றும்
அவளுக்கு கதிர் பாரதி கவிதைகள் என்றும் பெயர்
உள்ளது
- நிலத்துப் பாடல்களும், நிலம் பறிபோதலின்
பரிதவிப்பும்,ஆற்றாமையும், மொழி செழுமையும்,
முன்பை விட நெகிழ்ந்த காதலும் நிறைந்திருக்கும்
கதிர் பாரதியின் 'ஆனந்தியின் பொருட்டு
தாழப்பறக்கும் தட்டான்கள்' படித்த பின்..

No comments: