தற்காலிமாக




நேற்றைய பொழுதில்
சந்தித்து கொண்டோம் எதிரெதிர் திசைகளில்.
புன்னைகைத்தோம் கைக்குலுக்கினோம்.
உன்பார்வை போல் என் பார்வையும்
வானம் தாண்டி கிடந்தது.
நம் முகத்தில்சுண்ணாம்பு கலவை
அப்பிக்கிடந்தது. 
நம் சொற்கள் நலம் தாண்டி செல்லவேயில்லை
சில வேளைகளில் சொற்கள் நிறம் மாறுவதில்லை. 
கண்முன்னே இனம் அழிவதயையும் கண்டுகொள்ளாத
நமக்கு
அந்த கணத்தில் சுற்றி நடப்பவைகளில்தான்
எவ்வளவு கவனம்.
விடை பெறுவதற்கான அவசரமும்
நெரிசலும் நமக்கு பக்கத்திலேயே கிடந்தன. 
விடைபெற்றோம் அவரவருக்கான திசைகளில். 
வரும் நாட்களில் சந்திக்க நேருமானால்
என் முகத்தை பிட்டத்திலும்
உன் முகத்தை தோள்பட்டையிலும்
வைத்து கொள்வோம்
நமக்கிடையேயான
அந்தகணத்தில் நிகழும்  
துரோக நடனத்தின்
அரங்கேற்றத்தை ஒத்திவைப்போம் 
தற்காலிகமாவது.

மே -2011 உயிர் எழுத்து இதழில் வெளியான எனது கவிதை 
நன்றி : உயிர் எழுத்து

13 comments:

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

மிகவும் இறுக்கமான உணர்வுகளை மிகவும் இறுக்கமான மொழியில் சொல்கிறது கவிதை.

rvelkannan said...

அப்படியான இறுகிய ஒரு நிகழ்வில் எழுதியது தான் சுந்தர் ஜி,
வருகைக்கும் கருத்திற்கும் நன்றியும் அன்பும்

சத்ரியன் said...

//கண்முன்னே இனம் அழிவதயையும் கண்டுகொள்ளாத நமக்கு - அந்த கணத்தில் சுற்றி நடப்பவைகளில்தான்
எவ்வளவு கவனம்.//

இதற்கடுத்தடுத்து உள்ள வரிகளும் “உள்ளுக்குள்” விலாசுகின்றன.

"உழவன்" "Uzhavan" said...

உங்கள் பாணியில் அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

Rathnavel Natarajan said...

நல்ல கவிதை -
வாழ்த்துக்கள்.

நிரூபன் said...

எதிர்பாராத தருணங்களில் ஏற்படும், வேண்டத்தாகக/ விரும்பத்தாக உறவுகளைப் பற்றிய குறிப்புக்கள் இங்கே குறியீட்டின் மூலம் கவிதையில் தொனிக்கிறது.

www.eraaedwin.com said...

வலிக்கிக்கிறது தோழர். தொடர்ந்து சந்திப்போம்.

திருநாவுக்கரசு பழனிசாமி said...

கண்களுக்கு தெரியாத சிலந்தி வலையைப் போல் துரோகம் நம்மை சுற்றி படர்ந்திருக்கிறது..அதிலிருந்து மனிதனை மீட்க முயற்சிக்கிறது கவிதை

ச.முத்துவேல் said...

எனக்கு மிகவும் பிடித்திருந்த கவிதையிது , கண்ணா.

கனவுகளின் காதலன் said...

நண்பரே,

உள்ளே நுழைந்து உணர்வுகளை இறுகப்பிடித்து உலுக்கும் வரிகள் இவை.

rvelkannan said...

நண்பர் சத்ரியன்
நண்பர் உழவன்
நண்பர் ரத்னவேல்
நண்பர் நிரூபன்
தோழர் இரா. எட்வின்
நண்பர் திருநாவுக்கரசு பழனிசாமி
நண்பர் ச. முத்துவேல்
நண்பர் கனவுகளின் காதலன்
அனைவருக்கும் நன்றியும் அன்பும்.
ஊக்கம் அடைந்தேன்.நன்றி

இராஜராஜேஸ்வரி said...

உன்பார்வை போல் என் பார்வையும்
வானம் தாண்டி கிடந்தது.
நம் முகத்தில்சுண்ணாம்பு கலவை
அப்பிக்கிடந்தது. //
இறுகிய நிகழ்வு...

உயிரோடை said...

வாழ்த்துகள் வேல்கண்ணன்