கனவில் வந்த சிவன்
---------------------------------
கனவில் வந்த சிவன்
தேடிக் கண்டறியா நகரத்துள் அழைத்துச் சென்றான்
காடுடைய சுடலை சாம்பல் பூசி வீதியில்
அங்கம் உருண்டான்
வீணை மீட்டி
ஒரு தெரு
உடுக்கை ஓங்கி ஒலிக்க
புறத்தே
ஆனந்த தாண்டவமிட்டான்
பம்பை முழங்க
ஒரு தெரு
பறையடித்து
ஒரு தெரு
நிலமதிர கொடுகொட்டி ஆடலுடன்
ஒரு தெரு
சேகண்டியுடன் சங்கொலித்து
சலனமற்று நடந்தான்

இசைக்கும் ஓசை பலப்பல
தெருவின் இசை பலப்பல
நடை தளர்ந்த பொழுதில் தேடிக் கண்டுகொண்டேன்

தெருவின் தேர்வே இசை
இசையின் தேர்வே சிவன்
கனவின் தேர்வு நான்

ஓவியம் : சீனிவாசன் நடராஜன்

No comments: