Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

தொடரும்

என் மீதமர்ந்த பறவை
இளைப்பாறிய பின் பறக்கிறது.

மீண்டும்
அமரும் வரை
பின்
தொடரும்
என் கிளை.

பொலிவற்ற முகங்கள்
இருள் கவிழ்ந்த தேவதைகள்.
இலையசைவு துளியுமில்லை
அனல் சுவாசம்
குளிர் வற்றிய கோடை நிலவு
நிழலற்ற நெடுஞ்சாலை முடிவற்ற வானம்
அயர்ந்த உடல் அசைக்கவியலா கால்கள்
அந்தியில் தொடங்கும் ஒப்பாரி நடுஇரவுக்கும்
வலிமுனகல் நடுவே உறக்கம் மிகவும் கடிது
நாளொன்று நெடுயுகம்
ஊரடங்கில் காலமும் முறுவலித்துக் கொண்டிருக்கிறது
ஓய்வற்ற பசியோ கொடிதினும் கொடிது

கனவில் வந்த சிவன்
---------------------------------
கனவில் வந்த சிவன்
தேடிக் கண்டறியா நகரத்துள் அழைத்துச் சென்றான்
காடுடைய சுடலை சாம்பல் பூசி வீதியில்
அங்கம் உருண்டான்
வீணை மீட்டி
ஒரு தெரு
உடுக்கை ஓங்கி ஒலிக்க
புறத்தே
ஆனந்த தாண்டவமிட்டான்
பம்பை முழங்க
ஒரு தெரு
பறையடித்து
ஒரு தெரு
நிலமதிர கொடுகொட்டி ஆடலுடன்
ஒரு தெரு
சேகண்டியுடன் சங்கொலித்து
சலனமற்று நடந்தான்

இசைக்கும் ஓசை பலப்பல
தெருவின் இசை பலப்பல
நடை தளர்ந்த பொழுதில் தேடிக் கண்டுகொண்டேன்

தெருவின் தேர்வே இசை
இசையின் தேர்வே சிவன்
கனவின் தேர்வு நான்

ஓவியம் : சீனிவாசன் நடராஜன்

பதங்கமாதல்

Image result for chennai city bus 12b




வெக்கைப் பேருந்தினுள் எழுமிச்சைப் 
பெண்ணொருவர் பச்சை வெள்ளரியை 
முன்பின்பாக நடந்து கூவி விற்கிறார்
மாம்பழ அம்மாவிடம்
கிளை நீட்டி கேட்கிறது வெண்டை பிஞ்சு

எழுமிச்சை இலவசமாகத் தந்த பசேலென்ற 
பாம்பைத் தலை வால் கிள்ளித் தருகிறார் மாம்பழம்

ஒடிந்த பாம்பு
வெண்டைப் பிஞ்சின் வாயில் நலுங்குகிறது 

விஷவெக்கை முறிந்து 
பேருந்தில் குளுமை நிரம்புகிறது

(12B-க்கு)

நன்றி  : தி இந்து தமிழ் தீபாவளி மலர் 2019
நன்றி : Jaikumar Mankuthirai , தி இந்து குழுமம்

இரண்டு கவிதை கல்கி அக்டோபர் 13, 2019

Image may contain: 2 people, including Vel Kannan, people smiling

கல்கி 13, அக்டோபர் 19 இதழில் வெளிவந்த என்னுடைய இரண்டு கவிதை:

1. ரொட்டி
--------------

எனக்குக் காரம் தோழிக்கோ இனிப்பு பிடிக்கும்;
கடைசி மகள் உவர்பைச் சப்புக்கொட்டி ருசிக்கிறாள்;
அலுவலக நண்பர் புளிச்சா கீரையை விரும்பி உண்கிறார்;
எல்லோருக்குமான உணவை எப்படித் தயாரிப்பது என்று
முயற்சித்துக் கொண்டிருக்கின்றேன் நெரூதா,
உங்களின் ரொட்டிகளைப் போல..

2.நம் வீடு
------
என் அடைசலில் உருவாகிய கொசு உன்னைக் கடித்தது
உன் நிரவலில் வளரும் பூனை என்னைப் பிறாண்டியது
வேட்டை நாய்களை ஏவினேன்
பசித்த புலியின் கூண்டு திறந்து விடுகிறாய்
ஆற்றின் வழித்தடத்தில்
நாம் அமைத்த வீட்டினை நோக்கி
ஒற்றை யானை வந்து கொண்டிருக்கிறது.

நன்றி : கவிஞர் Amirtham Surya(அட்டகாசமான வடிவமைப்புக்கு நன்றி நண்பா) &
கல்கி வார இதழ்.

உருண்டோடும் மூன்றாம் உலகம்




மடியில் கிடந்த இரண்டு பந்துகளைவிடச்
சின்னஞ்சிறிய சிவப்பு நிறப்பந்து
உன் இடது பிஞ்சுக் கையில் கச்சிதமாய்ப் பொதிந்திருந்தது
'கேட்ச்' என்று என்னை நோக்கி வந்ததைத் தவறவிடுகின்றேன்
கரைபுரண்டு ஓடும் நதியின் குளிர்ந்த கூழங்கற்கள் வந்தடைகின்றன
அடுத்ததாக மூவண்ண பந்தை
வலதுப் பிஞ்சிலிருந்து எறிய, தவறவிடுகின்றேன்
மிதக்கும் நந்தவனத்தில் பதினோரு துளையிட்ட
புல்லாங்குழலை மாயா வாசிக்க கேட்கிறேன்
இறுதியாக உன் இருகைகளிலும் பிடித்தெறிந்த
பலவண்ணமுள்ள பந்தைச் சரியாகப் பிடித்த நொடியில்
கிடுகிடு பள்ளத்தாக்கில் இவ்வுலகை இழுத்துச் செல்கிறது
பெரும்பாதரசக் குண்டு

(சோலைமாயவனின் மாயாவிற்கு )

நன்றி : தி இந்து தமிழ் தீபாவளி மலர் 2019
நன்றி : Jaikumar Mankuthirai , தி இந்து குழுமம்

நிலவெளி ஆகஸ்ட்'19 மாத இதழில் வெளியான எனது கவிதை:


தற்கொலைக்கு முடிவெடுத்து
கொலை செய்யத் துணிகிறேன்
கொலை
கொலைகள்
கொத்து கொத்தாய் கொல்வதற்கு
சரியான வழி யுத்தமென..
பலனாக கிடைக்கும்
சிதிலமடைந்த நகரங்கள்
அடையாளம் சிதறுண்ட தேகங்கள்
என்பதை நினைவிலும் சகிக்காமல்
தற்கொலையுண்டேன்
புனிதம் தழுவிக்கொண்டது
---
நன்றி : நிலவெளி ஆசிரியர் குழு

நிலவெளி ஆகஸ்ட்'19 மாத இதழில் வெளியான எனது 2வது கவிதை:

மகனே! சுவரில் மாட்டப்பட்டிருக்கும் இந்த ஓவியம் பாட்டன் காலத்தியது என்று தாத்தன் சொன்னார் அவருக்கும் அவரின் தாத்தன் சொன்னதாம் அதோ, ஓவியத்தின் வலது மூலையில் தினவெடுத்த தோளுடன் இருப்பது உன் பூட்டன் நடுவில் திசைமுழுக்க பார்வையை வியாபித்திருக்கிறாரே அவரே, ஆதித்தாய் முதலில் காணுற்ற போது இந்தளவிற்கு இரைச்சலில்லை தூரத்திலிருந்து அகவல் ஒலியும் சிற்சில பரபரப்பும் நிலவியது தாத்தனுக்கு ஒளி ஒலியுடன் வாசனையும் சமீபத்திருந்தது. என் பால்யத்தில் முதன் முதலாக செல்கள் அரிக்கத் தொடங்கியிருந்தது இன்று கரையான்கள் கூடாரமிட்டு இருக்கின்றன விரைந்து வா கோடாரி கொண்டு பாளங்களாக பிளந்து எடுப்போம் ---- நன்றி : நிலவெளி ஆசிரியர் குழு

உறக்கம்

No photo description available.

அடர்ந்த இரவில் உறங்கும் குழந்தை
நீண்ட பயணம் செல்கிறது
நீண்ட இரவில் உறங்க முற்படும் நாம்
வட்ட வடிவ பயணத்துக்குள் நுழைகிறோம்
*
ஆழ்ந்த இரவின் உறக்க எல்லையில்
ஒரே சமயத்தில் இரண்டு கனவுகள்
ஒரு கனவில் நானும் ஒரு கனவில் உறக்கமும்
கனவு காண்கிறோம்
அக்கனவுக்குள் நித்தியதுயில் கொண்ட நீங்கள்
நகரும் நத்தை கொம்பின் மீதான பனித்துளிக்குள் பால் வீதி
*
ஒரு முறையேனும் ஓசை எழுப்பாமல்
இரவுக்குள் நுழைந்து விட வேண்டும்
இரவு நுழைவது போல
--
நன்றி : சஞ்சிகை , 

ஜூன்'19 'க்ளைமேட்' கலைவெளி மாத இதழில் வெளியான எனது கவிதை.


இரண்டு கவிதை:
----------------------
1
நெளிந்த சொற்களுக்குள் மெனெக்கெட்டு
எப்படியோ மீனை பிடித்துவிட்டேன்.
செதில் நீக்கம் செய்துகொண்டிருக்கையில் 
பூண்டு மஞ்சள் கல் உப்பை தயார் நிலையில் வைத்து இருக்கிறீர்கள்.
மீனை ஆய்ந்து கொண்டிருக்கும் போதே குழம்பை கொதிக்க வைக்கிறீர்கள்
தூய்மையான துண்டாடிய மீன்களை உங்களிடம் தருகிறேன்.
"தலைப்பிரட்டையை வைத்து என்ன செய்வது, மீன் எங்கே?"
இரக்கமில்லாத உங்களின் கேள்விக்கு
எங்கிருந்து கொண்டுவருவது கவிதையை

----------------------
2
ஒவ்வொரு நாளையும் ஒரு வட்டத்துக்குள் கடக்கிறேன்.
நேற்றைய வட்டத்தின் உட்புற சுவர் மஞ்சள்
முன்தினம் கரும்பச்சை
அதற்கும் முன் அடர்நீலம்
'அதெல்லாம் வேண்டாம்'
மத்திமவயது பெண் கதவை சாத்தும்
இன்றைக்கு கருப்பு
என்றென்றைக்குமே கனவுக்குள் வெள்ளை மட்டுமே உலவுகிறது

--
No photo description available.

நன்றி : 'க்ளைமேட்'

கரைதலின் நிமித்தம்


டலை சமுத்திரம் என்றே சொல்வார் அப்பா
சமுத்திரம் பற்றி பேசுவதற்கு அப்பாவிடம் கதைகள் இருந்தன
ஒரு முறையும் கால் நனைத்ததில்லை.
ஒரு நாளில் வலுக்கட்டாயமாக அலைகளில் நிறுத்தியதில் 
'அடேய்...ஊ' என்ற குதூகலித்த குழந்தையாய் 
குரல் எழுப்பி இறுக கைகளை பற்றிக் கொண்டார். 
அன்றைய நாளில் சென்ற நிலமெங்கும் சமுத்திரம் இருப்பதாய்
கைகளை பற்றிக் கொண்டே நடந்து வந்தார்.
இரவில் கைகளை கோர்த்துக் கொண்டே உறங்கினார்.
அன்றிலிருந்து சில கதைகள் சேர்த்துக் கொண்டன. 

சமுத்திர கரையோரம் பெரியண்ணன் தோளின் பின்னே எறிய
இரு கைகளாலும் பிடித்து கொள்ளவேண்டும் 
போலிருக்கிறது அப்பாவின் அஸ்தி கலசத்தை.

நன்றி : குங்குமம்

அவள்


அழகியப் பூ வேலைப்பாடு கொண்ட அந்த கித்தானை 
பல மணி நேரமானாலும் பார்த்துக் கொண்டிருப்பாள்
அவள் விரும்பியதை விட வெறுத்தது அதிகம்
இரண்டு நிமிட பேச்சில் நான்கு முறை 'பிடிக்கலை'யை சொல்லிவிடுவாள்
உதட்டை தன்னிச்சையாக ஈரப்படுத்திக் கொள்வதாய் இருக்கும் அந்த சொல்
கடல் நுழையும் சூரியனையும் ஆரஞ்சு நிறத்தையும் 
அவள் தவிர்ப்பதில்லை
அவளுக்கு வலதை விட இடது முலை சிறியது
இடம் தொடுகையில் அதிக உணர்ச்சி வசப்படுவாள்
என்னைத் தவிர்த்து எல்லோரிடமும் சொல்லித் திரிகிறாள்
'அவனைப் பிடிக்கலை'

அதீதத்தின் மேலுறைந்த வெண்மையின் சுவடு


எரிதணல் கற்றைகளை உமிழும் சூன்யம்
உன் மெல்லிசை 
ஒரு தழுவல் 
விரல் தீண்டல் 
எதுவுமற்றுக் கிடக்கிறேன்
உன் கூர்விழியின் சுடரொளியை
காணக்கிடைக்கும்போது
சேமித்துக் கொள்ள முடிவதில்லை
விரல் கோர்க்கையில் கிடைக்கும் இதம் போலவே


கணப்பொழுதில் கண்டடைந்துவிட்டேன் 
உன்னை
முதுவேனிற் காலத்தில் தாயென அள்ளி
கார்காலத்தை மலையெனக் கடந்து
பின்வந்த காலத்தில் இலையென கூம்பி உதிர்த்து
கடும்பனி  காலத்தில் தோள் சாய்ந்து இறுக்கி
இளவேனிற்க்காலம் வரை தோழியென உடன் வருகிறாய்
மிகக் கொடிய சுயநலமியான நானோ
நிர்வாணத்தை தவிர்த்து
வேஷத்தை தொடர்கிறேன்


சீரற்ற உன் மூச்சில் அறிந்தேன்
வாழ்நாளில் நான் செய்த பிழை

அந்தி கதிரவனாய் உள்ளிழுத்துக் கொள்கிறேன்

மடி சாய்ந்தக் கணமே கேட்டேன்
எனக்கான கல்லறை செய்யப்படும் ஓசை
வெற்றாய் நிலத்தை ஆக்கிரமிக்கும்
எதையுமே வெறுக்கிறேன்
இதமான சூட்டுடன் பாயும் குருதியை
சற்று நேரத்தில்
உறிஞ்சிவிடுவாய்
எஞ்சிய உள்ளீடற்ற எலும்புகளை
இதோ இந்த ஆழிப்பேரலை
கொண்டுச் செல்லும்



நன்றி : கணையாழி
ஓவியம் : Man Ray
நன்றி : ஆறுமுகம் முருகேசன், நரன், ந.பெரியசாமி 

பாதரச தேவதை

 


அலை பேசிப்பேசி கரைந்து போன கணங்கள்.
அணையிலிருந்து வெளியேறிய நமது சொற்கள்
பாலையிலிருந்து பூக்களை கொய்கின்றன.

நீ கட்டியிருந்தசந்தனம் பூத்த பழுப்பு
நிற மினுமினுப்பு சேலையே
வனதேவதைகளின் உடையென
நம்பினேன்.

இடப்பாதம் மேல் வலப்பாதம் பதிந்திருந்த
உன் அமர்வை பாதரசங்களில் பதியமிடுகிறேன்.

இளங்கீற்றில் பிளந்த நிலவிலிருந்து
வந்து விழும் பார்வையில் பசியாறிய பின்
கள்வெறி கொள்கிறாள் நீலி.

வனப்புகளில் கூத்தாடிய பின்
அவித்த பனங்காய்களின்
வாசம் அடித்தது.

திரண்ட வெக்கையொன்று
நம்மை பிரித்து சென்ற இரவிலிருந்து
பித்தேறி சுற்றித்திரிகின்றேன்.

நன்றி : கல்கி தீபாவளி மலர்.

பதிலி




ஆழிப் பெருங்காற்றில் 
அணையாமல் காத்து இருக்கிறேன். 
அத்தனை கண்ணீ ர் துளியிலும்  
நனையாமல் பார்த்துக் கொள்கிறேன். 
யாரும் அறியாமல் அவ்வளவு ஆழத்தில் 
ஒளித்து வைத்திருக்கிறேன். 

தோன்றிய நாளிலிருந்து 
தொடர்ந்திருக்க வேண்டும்.
இப்போது என் முறை.
பல யுகங்கள், எல்லையற்ற 
பதில்களை 
தின்றும் தீராத இந்தக்கேள்வி. 

வீதியோரம் நின்றிருந்த தசரதன் 
தன்னிடம் வகை ரீதியாக 1000 பெண்கள் 
இருப்பதாக கூறினான். 
இட வசதி தானே அமைத்து கொடுப்பதாகவும் 
பணத்துடன் ஆணுறையும் சொந்தமாக 
கொண்டு வரச்சொன்னான்.
999 ஆணுறைகள் மற்றும் இந்த கேள்வியுடனும் 
சென்று கொண்டு இருக்கின்றேன். 

நன்றி : மலைகள்.காம்

இசைக்காத இசைக்குறிப்பு



என்னை
அகழ்தெடுக்கும் உன் விழிகளில்
இருந்து தான் பிரித்தெடுத்தேன்
உயிர் கவ்வும் ஒரு சொல்லை.

அச்சொல்லை விதைத்து
முளைத்தெடுத்த நொடியில்தான்
தோன்றிமறைகிறது கோடிமின்னல்.

அச்சொல்
மலையருவி தோன்றும் கணத்திலும்
முன்பனி வீசும் முதல் பொழுதுகளிலும்
காலப்புழுதியில் உறைந்திருக்கும் ரகசியங்களிலும்
படிந்திருக்கிறது.

அச்சொல்:
பாதளக்கரண்டியிலும் அகப்படாத
கிணற்றாழங்களில் கசியும் துளை.
சுகிக்காத ஆழ்கடலின் ஏதோ ஒன்று.
அப்பாலுக்கு அப்பாலும் மினுக்கும் விண்மீன்.
முலைக்காம்பில் திரண்டு நிற்கும் வியர்வைத்துளி.
மாமழையையே அள்ளிப் பருகிய பின்னும்
அடங்காத தாகம்.
மரணத்திற்கு இறைஞ்சி நிற்கும் சிரஞ்சீவி.
தனிச்சொர்க்கத்தை உதறித்தள்ளும் திரிசங்கு.
நிரம்பிக் கொள்ளாத கவிதை
ஆகவும்.


நன்றி : மலைகள்.காம்.
நன்றி ஓவியம் சிவகுமார்

கருப்பு தேநீர் ஞாயிறு


யாழினி,
இந்த ஞாயிறு எலுமிச்சை 
தேன் கலந்த கருப்பு தேநீரில் 
தொடங்குகிறது
வண்ண சட்டையணிந்த 
அவர் நம்முடன் கலந்து கொண்டார்
எதிர் வீட்டிலிருந்தது வருவதாக சொன்னார்
செம்மண் நிற நீள மயிறு 
ஒன்று ஒட்டி கிடந்தது அவரின் மேல்
எதிர் வீட்டு பெண்ணிற்கு  அப்படித்தானிருக்கும்

நம்முடன் பேச தொடங்கிய அவர் 
எல்லாவற்றையும் எல்லாவற்றிலுமான 
அரசியலை மட்டும் பேசினார்
அவராகவே மரணத்தையும் பேசினார் 
உண்மையில்
எல்லா மரணத்திலும் அரசியல் 
இருப்பதாக தெரிந்தாலும் அரசியலற்றது 
மரணம் தான் என்றார்

திராட்சை மதுவை 
முட்ட முட்ட குடித்தோம்
அவர் உன்னையும் என்னையும் 
கலவி சென்றார்
எதிர்வீட்டுபெண் மரணித்த செய்தி 
வருவதற்கு முன்பே நமக்கு 
தெரிந்திருந்தது வந்திருந்தவர் 
யாரென்று
நாம் மரணிக்க தொடங்கினோம்.
-------------------------------------

நன்றி : தாரணி-இலக்கிய இதழ். 
தொடர்புக்கு: அ . கார்த்திகேயன். 
அலைபேசி: 8870985812.

தடாக உளி


இந்த குளத்தில் எறிகிறேன் 
ஒழுங்கற்றவைகளாக 
ரயிலடி அங்காடித்தெருவை 

பேருந்து 
நிறுத்தத்தை 
கடற்கரை மாலையை 

பனி இரவுகளை
குளத்திலிருந்துயெழுபவை 
வட்டமிடுகின்றன
கனசெவ்வகமாகவும் 
எண்கோணமாகவும்  
வெகு ஆழத்தில் பனி உளியொன்று
சிறு சிறு கற்களாய் உருமாற்றியது
எறிந்த கற்கள் குளத்தில் மிதக்கின்றன
நானோ காற்றில் கரைந்தவாறு.

நன்றி : உயிர் எழுத்து , நவம்பர் 2012

என் அண்ணன் இரா.இராஜவேலுவிற்கு




பச்சையம் 
அவனின் 
மருத்துவப் பரிசோதனையின் 
முடிவிற்கு காத்திருந்தது 
இந்த ஆற்றங்கரையோர மரத்தனடியில் தான் 
முடிவில் மரம் அதிர்ந்தது 

அவனின் 
தொடர் சிகிச்சையில்  
இளைப்பாறலும் 
வலி குறைந்த நேரங்களிலும் 
இங்கே தான் நின்றிப்போம் 
மொத்தப் பிணியையும்  
இம்மரமே உறிஞ்சுக்கொள்வதை 
போல  சாய்ந்தே நின்றிருப்பான் 

அவனின் 
அறுவை சிகிச்சையின் போது 
நின்றிருந்தேன் தனியாக 
தளிர்களையும் கிள்ளாமல்

அவனின் 
சாம்பலை ஆற்றில் கரைக்கும் 
இந்த கணம் 
மரம் பச்சையத்தை கவிழ்க்கிறது 

_________________________________

சுமக்கும் சாலை 
இன்று  கடக்கும் இந்த   சாலை 
அவனை நினைவு படுத்துவது 
நெடுநாள் பின் கடக்க நேரிட்டதாகவும் 
இருக்கலாம் 

அவன் கடந்த போதெல்லாம்
கையசைத்த ஹிண்டு பெரியவர் 
காரணமாகயிருக்கலாம்

இதேசாலையில் இருக்கும் வீட்டிலிருந்து 
கேட்கும் அதீத இருமல் 
காரணமாகயிருக்கலாம்
சாலை முனையில் திரும்பும்
சிவந்த உயரமான அந்த மனிதர் 
காரணமாகயிருக்கலாம்


இறுதியாக அவனைத்  தூக்கிச் 
சென்றபோதுயிருந்த  
இதே இலையுதிர்வு தூறல்களாகவும் 
இருக்கலாம் 

இல்லாத போதும் 
என்றுமே அவனைச் சுமந்தபடிதான் 
இருக்கும் இந்த சாலை 

நன்றி : உயிர் எழுத்து  - November '2012

யுகம்



நமக்கிடையில் எப்போதும் இருக்கும் 
பெரும் மலையொன்று 

இந்த கணத்தில் மாறிப்போனது 
மவுனமாக 
கானல் நதியொன்று 
இந்த கணத்தில் மாறிப்போனது 
பனி மழையாக
கொடிய நாகமொன்று 
இந்த கணத்தில் மாறிப்போனது 
ஆலம் விழுதாக 
அடிவயிற்றில் பிசைந்த வலியொன்று
........விடு .......... பட்டு 
செல்லும் இந்த கணத்தில் 
வியர்த்து நனையும் தேகத்துடன் 
கிடப்போம் அப்படியே.